search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாலு பிரசாத் யாதவ்"

    • ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
    • 3 மாதங்களுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 2004-2009 வரை மத்திய மந்திரியாக இருந்தார்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அவர் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.

    அப்போது இந்திய ரெயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி உள்பட 14 பேர் இந்த வழக்கில் இன்று (15-ந்தேதி) ஆஜராக டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் கடந்த 27-ந்தேதி சம்மன் அனுப்பினார்.

    இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். வீல் சேரில் அவர் கோர்ட்டுக்கு காலை 10 மணிக்கு வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சிகிச்சைக்கு பிறகு லாலு முதல் முறையாக கோர்ட்டு வந்தார்.

    மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோரும் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    காலை 11 மணிக்கு தான் கோர்ட்டு நடவடிக்கைகள் தொடங்கியது. ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, மிசா பாரதி ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    ஜாமீன் பெற்றதால் லாலுவுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஏற்கனவே பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இருந்தார்.

    இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் போலோ யாதவ் கடந்த ஜூலை மாதம் கைதாகி இருந்தார்.

    • ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு பணிய மாட்டோம் என்றார்.

    பாட்னா:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இதுவரை நடந்த சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) பணிய மாட்டார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பா.ஜ.க. இவ்வளவு கீழ்த்தரமான அளவிற்கு இறங்குமா? என்றும், மற்றொரு டுவிட்டர் பதிவில், "எனக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் இருந்து வருகிறது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.
    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.

    குரானி :

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார்.

    தனது உடல் நலக்குறைவுக்கு பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.

    • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது.
    • லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார்.

    புதுடெல்லி

    ராஷ்டிரீய ஜனதாதள கட்சி நிறுவனர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்ததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். கோர்ட்டும் அனுமதி அளித்தது.

    சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார். இதற்காக லாலுபிரசாத் யாதவ், இன்று (சனிக்கிழமை) சிங்கப்பூர் செல்வார் என்று தெரிகிறது.

    லாலுவுடன் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் செல்ல டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் அனுமதி அளித்துள்ளார். மிசா பாரதி, சைலேஷ்குமார் ஆகியோர் மீது ரூ.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கோர்ட்டு விதித்த நிபந்தனைகளுடன் இருவரும் சிங்கப்பூர் செல்கிறார்கள்.

    • தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்.
    • என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன்.

    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 74), கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் உள்ள இவர் தற்போது உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்.

    டெல்லியில் மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கியுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் மறு வாழ்வு தரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தனக்கு உயிர் தந்த தந்தைக்கு மற்றொரு மகளான ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தந்து மறு வாழ்வு தர மனமுவந்து முன்வந்துள்ளார்.

    இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகள் முடித்து வந்தார்.

    அவருக்கு தனது இரு சிறுநீரகங்களில் ஒன்றை வழங்க முன்வந்துள்ள மகள் ரோகிணி ஆச்சார்யா, ஒரு டாக்டர் ஆவார். இவரது கணவர் சாம்ஷெர் சிங், சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் தற்போது சிங்கப்பூரில்தான் வசித்து வருகின்றனர்.

    தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்தான் என்று ரோகிணி ஆச்சார்யா உருகுகிறார்.

    தந்தைக்கு சிறுநீரகம் அளிப்பது குறித்து ரோகிணி ஆச்சார்யா உருக்கமுடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன். எல்லாம் நல்ல விதமாக நடந்தேற வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் குரல் கொடுக்க அப்பா தகுதியானவராக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அரசியல் களத்தில் இருந்து வெளியே உள்ள இவர், தனது தந்தை லாலுவின் மடியில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட 2 புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். (அதில் ஒன்றை இங்கே காணலாம்.)

    இவர் அவ்வப்போது லாலு பிரசாத்தின் ஆதரவாளர்களை, தனது தந்தையின் ரசிகர்களாக கருதி அவர்களுடன் டுவிட்டர் வழியாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
    • தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது

    புதுடெல்லி :

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

    ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ''அந்த வழக்கில் எதுவுமே வெளிவரவில்லை. நான் இப்போது அவருடன் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.

    இந்தநிலையில், நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிய முக்கிய கொள்கைகளை லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஊழல் வழக்கில் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டு விட்டார்.

    2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது.

    அவர் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, இரண்டு மகள்கள் மற்றும் ரெயில்வேயில் வேலை பெற்ற 12 நபர்கள் மீது சிபிஐ கடந்த மே மாதம் 18ம் தேதி புதிய வழக்கு பதிவு செய்தது. வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 16 பேருக்கு எதிராகவும் சிபிஐ இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரெயில்வேயில் குரூப் டி பதவிகளுக்கு விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் ரெயில்வே அதிகாரிகளால், தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டதாகவும், வேலை பெற்ற நபர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தங்கள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து மாற்றியபோது அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. ராப்ரி தேவி மற்றும் இரு மகள்களின் பெயரில் விற்பனைப் பத்திரம் மூலம் நிலப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

    • இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
    • மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது.

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.

    இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது. சிங்கப்பூர் மருத்துவமனையில் அதற்காக வருகிற 24-ந்தேதி ஒதுக்கப்பட்டது.

    எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லக் கோரிய லாலு பிரசாத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்தது. இதனை சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் விசாரித்தார்.

    பின்னர், வரும் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை லாலு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • லாலு பிரசாத் யாதவ் பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.
    • சிறுநீரக சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது.

    ராஞ்சி :

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.

    இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அதற்காக வருகிற 24-ந்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை நேற்று ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்தது.

    தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டை அணுகியிருப்பது இது 2-வது முறையாகும்.

    இதற்கு முன்பு லாலுவின் கோரிக்கையின் பேரில், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விடுவிப்பதற்கு சி.பி.ஐ. கோர்ட்டு கடந்த ஜூன் 14-ந்தேதி உத்தரவிட்டது.

    • மத்திய ரெயில்வே துறை மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது சிறப்பு அதிகாரியாக அவரிடம் பணியாற்றியவர் போலா யாதவ்.
    • பாட்னா மற்றும் தர்பாங்காவில் உள்ள போலா யாதவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    புதுடெல்லி:

    கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்தவர் லாலு பிரசாத் யாதவ். இந்த சமயத்தில் அவரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் போலா யாதவ்.

    இவர் பாட்னாவில் உள்ள முக்கிய இடங்களை லாலுவின் குடும்ப உறுப்பினர் பெயருக்கு மாற்றி விட்டு அதற்கு பதிலாக இடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஜ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பீகார் தலைநகர் பாட்னா மற்றும் தர்பாங்காவில் உள்ள போலாயாதவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து போலாயாதவ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.
    • இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார்.

    மேதினி நகா்:

    கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, லாலு பிரசாத் யாதவ் பாலாமு மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று மேற்கொண்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் மேதினிநகரில் உள்ள ஹெலிபேடுக்கு பதிலாக கார்வா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில், அவர் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார். அப்போது அவர், தான் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதை அவா் ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டார்.

    இதையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    அந்த அபராதத்தை லாலு செலுத்தியதைத் தொடா்ந்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

    • சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.
    • சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசிரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    லாலு பிரசாத் யாதவ் இன்று காலை 8 மணியளவில் தனது அறையில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர்கள் லாலு பிரசாத் யாதவை அழைத்துச் சென்றனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்றும் சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்பட்டு தீப்பிடித்த மின்விசிறி அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ×